Untitled Document
முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | தொடர்பு | சினிமா | படத்தொகுப்பு
May 22, 2013 [GMT]

  • Welcome
  • Welcome
சிங்களக் குடியேற்றங்களால் விழுங்கப்பட்டு வரும் தமிழீழ மண்: (பகுதி-1)
[Friday, 2012-07-20 11:20:50]

(1) (கடந்த யூலை 4 ஆம் நாள் கனடா ஸ்ரீ அய்யப்பன் கோயில் மண்டபத்தில் தமிழ்த் தேசீயக் கூட்டமைப்பு (கனடா) மற்றும் கனடியத் தமிழ் அரசியல் செயல் அவையும் இணைந்து நடத்திய சமகால அரசியல் பற்றிய கருத்தரங்கில் திரு சிவஞானம் சிறீதாரன், நாஉ., திரு சீனித்தம்பி யோகேஸ்வரன், நாஉ., திரு சேரன் உருத்திரமூர்த்தி, நக்கீரன் தங்கவேலு ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.


  

அங்கு உரையாற்றிய ததேகூ (கனடா) அமைப்பின் தலைவர் திரு தங்கவேலு நக்கீரன் பேசுகையில் "இலங்கை சுதந்திரம் பெற்ற கையோடு அப்போது பிரதமராக இருந்த டி.எஸ். சேனநாயக்கா பாரிய சிங்களக் குடியேற்றத் திட்டங்களை உருவாக்கி காணியற்ற விவசாயிகளுக்குக் காணிகொடுத்தல் என்ற போர்வையில் தென்னிலங்கையில் வாழ்ந்த சிங்களக் குடும்பங்களை ஆயிரக்கணக்கில் கிழக்கு மாகாணத்தில் திட்டமிட்டுக் குடியேற்றினார். பின்னர் வந்த சிங்கள அரசுகள் கிழக்கில் மட்டுமல்ல வடக்கிலும் சிங்களக் குடியேற்றத்தை விரிவு படுத்தினர். கல் ஓயா (பட்டிப்பளை) அல்லை - கந்தளாய், வெலி ஓயா (மணல் ஆறு) போன்ற சிங்களக் குடியேற்றத்திட்டங்கள் வட - கிழக்குக் குடிப்பரம்பலில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன" எனக் குறிப்பிட்டார். அவர் பேசியதையும் பேச நினைத்ததையும் கீழே படிக்கவும்.)

சிங்களக் குடியேற்றம் மூலம் தமிழர்களது மண்ணைப் பறிப்பது என்பது இன்று நேற்றுத் தொடக்கப்பட்டதல்ல. இலங்கை சுதந்திரம் பெறு முன்னரும் பெற்ற கையோடும் அதற்கான திட்டங்கள் தீட்டப்பட்டன. இன்று கிழக்கை விழுங்கிய சிங்களக் குடியேற்றம் வடக்கை விழுங்கத் தொடங்கியுள்ளது. வடக்கில் வெள்ளம் கழுத்தளவுக்கு ஏறிவிட்ட காரணத்தால் நிலப்பறிப்புப் பற்றிப் பேசத் தொடங்கியுள்ளோம். அறுபது ஆண்டுகளுக்கு மேலாக நடந்துவரும் சிங்களக் குடியேற்றம் பற்றிப் பேச நீண்ட நேரம் தேவை. கிழக்கிலும் வடக்கிலும் நடந்தேறிய 3 முக்கிய சிங்களக் குடியேற்றத் திட்டங்கள் பற்றி மட்டும் சுருக்கமாகப் பேச விரும்புகிறேன்.

பொதுவாகக் குடியேற்றம் என்பது ஒரு நாட்டுமக்கள் இன்னொரு புதிய நாட்டிற்குக் குடியேறுவதையே குறிக்கும். ஆனால் இலங்கையைப் பொறுத்த மட்டில் அந்தச் சொல் அரசினால், அரச செலவில் குறித்த ஒரு இனத்தவர் (தமிழர்) செறிந்து வாழும் பகுதியில் வேறு இனத்தவரை (சிங்களவரை) பெருமளவில் கொண்டுவந்து குடியிருக்க வைப்பதையே குறிக்கிறது.

இப்படியான திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்தினால் தமிழ்மக்கள் கிழக்கு மாகாணத்தில் ஒரு குறுகிய காலத்தில் சிறுபான்மை இனமாக மாற்றப்பட்டு விட்டனர். இப்போது வடக்கிலும் சிங்களக் குடியேற்றங்கள் முடுக்கி விடப்பட்டுள்ளன. கிழக்கில் பெரும்பாலும் முடிக்குரிய தரிசு நிலத்திலேயே குடியேற்றம் தொடக்கப்பட்டது. ஆனால் இதற்கு எதிர்மாறாக வடக்கில் பெரும்பாலும் தமிழர்களுக்குச் சொந்தமான காணிகளில் சிங்களவர்கள் குடியேற்றப்படுகிறார்கள். இதனால் தமிழ் மக்களுடைய மொழி, பண்பாடு, சமூக - பொருண்மிய கட்டுமானம் நெருக்கடிக்குத் தள்ளப்பட்டு வருகிறது. தமிழினத்தின் தாயகம், தேசியம், தன்னாட்சியுரிமை கேள்விக் குறியாகி வருகிறது.

1931 ஆம் ஆண்டு நடந்த முதற் சட்டசபைத் தேர்தலின் பின்னர் ஆட்சி அதிகாரம் பெரும்பான்மைச் சிங்களவர்கள் கைக்குப் போனது. அவர்களே பெரும்பான்மை அமைச்சர்களாகவும் இருந்தனர். இவர்களுள் டி.எஸ். சேனநாயக்கா (20-10-1884 - 22-03-1952) முக்கியமானவர். திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்தின் சூத்திரதாரி இவரே ஆவார். சட்டசபை அமைச்சர் வாரியத்தில் (Board of Ministers) டி.எஸ். சேனநாயக்கா வேளாண்மை மற்றும் காணி அமைச்சராக இருந்தார். பின்னர் 1948 இல் அவர் பிரதமராகப் பதவி ஏற்றபோது காணி விவசாய அமைச்சராகத் தனது மகன் டட்லி சேனநாயக்காவை நியமித்தார். சிங்களக் குடியேற்றத் திட்டங்கள் தென்னிலங்கையில் ஈரலிப்பு (நன்செய் - Wet Zone) வலயத்தில் வாழ்ந்த காணியில்லாத விவசாயிகளது சிக்கலைத் தீர்த்து வைக்க உருவாக்கப்பட்டது என்று சொல்லப்பட்டது. இப்படி மேலுக்குச் சொல்லப்பட்டாலும் அந்தப் போர்வையில் வறண்ட பிரதேசமான (புன்செய் - Dry Zone) கிழக்கில் சிங்களவர்களைப் பெருமளவில் குடியேற்றுவதே டி.எஸ். சேனநாயக்காவின் உள்நோக்கமாக இருந்தது. அதனை ஒப்பேற்ற மிகவும் தந்திரமாகக் காய்களை நகர்த்தினார்.

பிரித்தானிய ஆளுநர் சேர் கியூ கிளிப்போட் (British Governor Sir Hugh Clifford) அவர்கள் தான் 1927 இல் ஈரலிப்பு வலயத்தில் வாழ்ந்த காணியில்லாத மக்களை வறண்ட வலயத்தில் குடியேற்றலாம் என்ற யோசனையை முதலில் முன்வைத்தவர். ஆனால் காணிப் பங்கீடு என்பது வேறுபட்ட கமூகங்களுக்கு இடையே எளிதில் உணர்ச்சியைத் தூண்டிவிடக் கூடிய ஒரு பொருள் என்பதால் அதுபற்றிக் கவனமாக இருக்க வேண்டும் என்று அவர் எச்சரிக்கை செய்தார். சேர் கியூ கிளிப்போட்டின் யோசனை 1927 இல் சட்டசபையால் உருவாக்கப்பட்ட காணி ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆணையத்தின் அறிக்கை 1932 ஆம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்டது. அந்த ஆணையம் அபிவிருத்தி செய்ப்படாத பெருமளவு காணிகள் குருநாக்கல், அனுராதபுரம், திருகோணமலை, மன்னார், முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணத்தில் இருப்பதாக அடையாளம் காட்டியது.

1933 ஆம் ஆண்டு விவசாயம் மற்றும் காணி அமைச்சராக இருந்த டி.எஸ். சேனநாயக்கா காணி மேம்பாட்டுச் சட்டம் ஒன்றைக் கொண்டுவந்தார். அந்தச் சட்டம் உணவு உற்பத்தியைப் பெருக்கவும் அரசின் செலவில் புதிய குடியேற்றத் திட்டங்களைத் தயாரிக்கவும் பாழடைந்த நீர்ப்பாசனக் குளங்களைத் திருத்தவும் வழி வகுத்தது. ஈரலிப்பு வலயத்தில் போதிய நிலம் இருந்தும் குடியேற்றத்துக்கு வறண்ட பகுதி நிலமே தேர்ந்தெடுக்கப்பட்டது. சுதந்திரத்துக்கு முன் புத்தள மாவட்டமும் அனுராதபுர மாவட்டத்தின் எல்லைப் புறங்களுமே குடியேற்றத் திட்டத்தில் அடங்கின.

முதலில் மின்னேரியாவில் சிங்கள விவசாயக் குடும்பங்கள் குடியேற்றப்பட்டன. அதனைத் தொடர்ந்து வட மாகாணம் கிளிநொச்சியில் விவசாயக் குடும்பங்கள் குடியமர்த்தப்பட்டன. சிங்களவர்கள் பொலநறுவை மற்றும் அனுராதபுரத்தில் குடியமர்த்தப்பட்டார்கள். சிங்களவர்கள், சிங்களப் பெரும்பான்மை இடங்களிலும் தமிழர், தமிழர் பெரும்பான்மை இடங்களிலும் குடியமர்த்தப்பட்டார்கள். இந்தக் குடியமர்வுகள் நியாயமாகவும் நீதியாகவும் காணப்பட்டது. இதனால் இந்தக் குடியமர்வுகளைச்சிங்களவர் போல் தமிழர்களும் வரவேற்றார்கள். ஒவ்வொரு குடும்பத்துக்கும் 8 ஏக்கர் நிலமும் பணமும் கொடுக்கப்பட்டன.

ஆனால் 1949 ஆம் ஆண்டில் குடியமர்வுக் கோட்பாட்டில் தலைகீழ் மாற்றம் ஏற்பட்டது. அந்த ஆண்டு பெப்ரவரி மாதம் டி.எஸ். சேனநாயக்கா அவரது நிரந்தரச் செயலாளராக இருந்த சேர் கந்தையா வைத்தியநாதன், நீர்ப்பாசன திணைக்களத்தின் இயக்குநராக இருந்த ரி. அழகரத்தினம் மற்றும் நில அளவையாளர் நாயகம் கலாநிதி எஸ். புரோகியர் (Surveyor General Dr. S. Brohier) ஆகியோரை அழைத்துப் பட்டிப்பளை ஆற்றை மறித்து அதில் ஒரு அணை கட்டுவதற்கான தனது யோசனையை முன்வைத்தார். இந்த நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ் நிலமில்லாத தமிழ் விவசாயக் குடும்பங்கள் குடியமர்த்தப்படுவர். எஞ்சிய நிலத்தில் நிலமில்லாத சிங்கள விவசாயிகள் குடியமர்த்தப்படுவர் என விளக்கினார். இந்தத் திட்டம் பற்றி ஓரு சாத்தியமான அறிக்கையை (feasibility report) தயாரிக்குமாறு டி.எஸ் சேனநாயக்கா ரி. அழகரத்தினத்தைக் கேட்டுக் கொண்டார்.

பிற்காலத்தில் அழகரத்தினம் வீரகேசரிக்குக் கொடுத்த ஒரு நேர்காணலில் இந்தத் திட்டம் பற்றித் தானும் சேர் கந்தையா வைத்தியநாதனும் மிகவும் ஆர்வம் அடைந்ததாகவும் பிரதமர் சேனநாயக்கா அந்தத் திட்டத்தை முன்மொழிந்த போது "தமிழர் நிலங்களை அபகரிப்பதே அவரது உண்மையான நோக்கம் என்பதை நாங்கள் கனவிலும் எதிர்பார்க்கவில்லை" எனக் கூறியிருந்தார். திரு அழகரத்தினம் மற்றும் அவரது திணைக்களப் பொறியாளர்கள் முஸ்லிம் ஊரான சம்மாந்துறைக்குப் பயணப் பட்டார்கள். அங்கிருந்து மாட்டு வண்டிகளில் பட்டிப்பளை ஆற்றோரமாகப் பயணித்தார்கள். பட்டிப்பளை ஆறு பதுளையில் உள்ள மடுசீமா என்ற மலைத் தொடரில் உற்பத்தியாகிக் கீழே 85 கிமீ ஓடி வங்காள வளைகுடாவில் கலக்கிறது. பின்னர் அந்த ஆய்வுக் குழு பட்டிப்பளை ஊருக்குப் பயணித்தது. பட்டிப்பளை கிமு 3 ஆம் நூற்றாண்டில் இருந்து வரலாற்றில் இடம் பிடித்த ஒரு செழிப்பான ஊர். அங்கிருந்து இங்கினியாக்கலைக்குப் புறப்பட்டது. அங்கு அணை கட்டுவதற்கான ஒரு இடம் தெரிவு செய்யப்பட்டது. அந்த இடத்தில் நீர்ப்பாசன திட்டம் ஒன்றை உருவாக்குவதற்கான பரிந்துரையை திரு அழகரத்தினம் குழு பரிந்துரைத்தது.

மத்தியதர வகுப்பைச் சார்ந்த தமிழ் அரச ஊழியர்கள் ஆங்கிலேயர் காலத்தில் தங்கள் வேலைகளை அவர்களது மனங்கோணாமல் கெட்டித்தனமாகச் செய்கின்ற மனப்பான்மையை வளர்த்து வைத்திருந்தார்கள். அதனால் தமிழர்கள் கடுமையான உழைப்பாளிகள் என்ற பாராட்டை வெள்ளைக்கார உயர் அதிகாரிகளிடம் இருந்து பெற்றார்கள். இந்த மனப்பான்மை இலங்கை சுதந்திரம் பெற்ற பின்னரும் நீடித்தது. அதனைச் சிங்கள ஆட்சியாளர்கள் முறையாகப் பயன்படுத்திக் கொண்டார்கள். சேர் கந்தையா வைத்தியநாதனுக்கு சேர் கொத்தலாவலையின் அமைச்சரவையில் வீடு மற்றும் சமூகநலன் அமைச்சர் பதவி (ஜி.ஜி. பொன்னம்பலத்தின் விலகலை அடுத்து) கொடுக்கப்பட்டது. இப்படி உயர்பதவி வகித்த தமிழ் ஊழியர்களிடம் இருந்து வேலை வாங்கும் போக்கு சனாதிபதி இரணசிங்க பிரேமதாசா காலம்வரை நீடித்தது.

திரு அழகரத்தினம் குழு செய்த பரிந்துரையின் அடிப்படையில் ஒரு சிறப்பு சபையை உருவாக்குவதற்கான சட்டத்தை சேனநாயக்கா நாடாளுமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றினார். பட்டிப்பளை என்ற அழகு தமிழ்ப் பெயர் கல் ஓயா எனச் சிங்களத்தில் மாற்றப்பட்டது. இதன் பின்னர் திருகோணமலை மாவட்டத்தில் சிங்களக் குடியேற்றங்கள் முடுக்கிவிடப்பட்டன. இவற்றின் மூலம் பெருவாரியான சிங்களவர்கள் கிழக்கில் குடியேற்றப்பட்டார்கள். இதன் விளைவாக தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்த கிழக்கு மாகாணத்தில் இன்று தமிழர்கள் சிறுபான்மை ஆக்கப்பட்டுவிட்டனர்.

ஓகஸ்து 23, 1949 இல் கல்லோயா (பட்டிப்பளை) பள்ளத்தாக்குத் திட்டம் பிரதமர் டி.எஸ். சேனநாயக்காவால் தொடக்கப்பட்டது. அடுத்த ஆண்டு முடியுமுன்னர் நீர்த்தேக்கத்தின் பணிகள் நிறைவு பெற்றது. இந்த நீர்த்தேக்கம் சேனநாயக்கா சமுத்திரம் என்று பெயர் இடப்பெற்றது. இலங்கையில் மனித உழைப்பால் உருவாக்கப்பட்ட மிகப் பெரிய நீர்த்தேக்கம் இதவாகும்.

கல் ஓயா திட்டத்தின் கீழ் 120,000 ஏக்கர் நிலப் பரப்பில் 40 கொலனிகளில் 20,000 சிங்களவர்கள் முதற்கட்டமாகக் குடியேற்றப்பட்டனர். ஒவ்வொரு கொலனியிலும் 150 குடும்பங்கள் குடியமர்த்தப் பட்டன. ஒவ்வொரு குடும்பத்துக்கும் 3 ஏக்கர் காணி நெற்காணியும் 2 ஏக்கர் மேட்டுக் காணியும் ஆக மொத்தம் 5 ஏக்கர் காணி கொடுக்கப்பட்டது. எண்ணி 6 கொலனிகளே தமிழ்க் குடும்பங்களுக்குக் கொடுக்கப்பட்டது. இவர்களும் 1956 இல் இடம்பெற்ற இனக்கலவரத்தின் போது சிங்களவர்களால் விரட்டி அடிக்கப்பட்டனர். திரும்பக் குடியேறிய பலர் 1958 இல் இடம்பெற்ற இனக் கலவரத்தின் போது விரட்டி அடிக்கப்பட்டனர். எஞ்சியவர்கள் 1990 ஆம் ஆண்டு சிங்கள இராணுவத்தால் துரத்தப்பட்டனர். இன்று அந்த காணிகளில் சிங்களவர்கள் குடியேறியுள்ளனர். தமிழர்கள் இனச் சுத்திகரிப்புக்குப் பலியாகி விட்டனர்.

கல் ஓயா மேம்பாட்டுக் குடியேற்றத்திட்டம் தொடக்கப்பட்ட போது 50 விழுக்காடு உள்ளுர் மக்களுக்கும் மிகுதி 50 விழுக்காடு வெளியாருக்கும் என்ற உறுதிமொழி கொடுக்கப்பட்டது. பின்னர் அது மீறப்பட்டது.

கல் ஓயா மேம்பாட்டு வாரியம் 67.2 மில்லியன் டொலர்களை இந்தத் திட்டத்திற்குச் செலவழித்தது. அன்றைய கால கட்டத்தில் இந்தத் தொகை மிகப் பெரியதாகும்.

பெப்ரவரி 4, 1951 இல் நடந்த சுதந்திரநாள் விழாவில் துரித கெதியில் கிழக்கு மாகாணத்தில் உருவாக்கப்பட்ட நீர்ப்பாசனத் திட்டங்கள் அரசின் முக்கிய சாதனை என டி.எஸ்.சேனநாயக்கா நாட்டுமக்களுக்குத் தெரிவித்தார்.

கிழக்கில் திட்டமிட்ட அரச ஆதரவு சிங்களக் குடியேற்றத்திட்டங்கள் மூலம் தமிழர் நிலங்களை விழுங்குவதற்கு முன்னோடியாக இருந்த டி.எஸ். சேனநாயக்கா சிங்களவர்களாலும் சிங்கள அறிவுப்பிழைப்பாளர்களாலும் தேச பிதா எனப் போற்றப்படுகிறார். இதில் வேடிக்கை அல்லது வேதனை என்னவென்றால் தமிழ் அமைச்சர்களைத் தனது பக்கத்தில் அல்லது கக்கத்தில் வைத்துக் கொண்டே டி.எஸ். சேனநாயக்கா கிழக்கில் தனது சிங்களக் குடியேற்றத் திட்டங்களை வெற்றிகரமாக நிறைவேற்றினார் என்பதுதான்.

தந்தை டி.எஸ். சேனநாயக்கா (04.02.1948 - 30.03.1952) அவரது மகன் டட்லி சேனநாயக்கா அமைச்சரவையில் (30.03.1952 - 19.06.1952) ( 19.06.1952 - 11.10.1953) திருவாளர் ஜி.ஜி. பொன்னம்பலம் மீன்பிடி கைத்தொழில் அமைச்சராக (1949 -1953) வீற்றிருந்தார். அவரைப் போலவே திருவாளர்கள் க. சிற்றம்பலம் (26-09-1947 - 1952) அஞ்சல் தொலைத் தொடர்பு அமைச்சராகவும் செ. சுந்தரலிங்கம் (26-09-1947 - 10-12-1948) வாணிகம் மற்றும் வியாபார அமைச்சராகவும் கொலுவிருந்தனர்.

இந்தத் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களே வட - கிழக்கு இணைந்த தமிழர் தாயகத்துக்குத் தன்னாட்சி உரிமை வேண்டும் என்ற கோரிக்கை எழுந்ததற்கு முக்கிய காரணிகளில் ஒன்றாகும்.

இந்தத் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்தின் விளைவாக 10-4-1961 இல் அம்பாரை மாவட்டம் என்ற புதிய மாவட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து பிரித்து உருவாக்கப்பட்டது. அதற்கு முன்னர் 1959 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட தேர்தல் தொகுதி மறுநிருணய ஆணையத்தின் பரிந்துரையின் பேரில் 19-03-1960 இல் சிங்களவர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஒரு புதிய தொகுதி (அம்பாரை) உருவாக்கப்பட்டது. பின்னர் அதன் பெயர் டிகமடுல்ல என மாற்றம் செய்யப்பட்டது.

கல் ஓயா குடியேற்றத் திட்டம் தொடங்கி சரியாக 11 ஆண்டுகளில் ஒரு புதிய தேர்தல் தொகுதியும் பின்னர் ஒரு ஆண்டு கழித்து ஒரு புதிய மாவட்டமும் சிங்களவர்களுக்குப் பிரித்து எடுக்கப்பட்டது கவனிக்கத்தக்கது.

1961 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட அம்பாறை மாவட்டத்தின் நிலப்பரப்பு 4,431 ச.கிமீ (1,775 ச.மைல்) ஆகும்.

1911 ஆம் ஆண்டு குடி மதிப்பீட்டின் படி அம்பாரை மாவட்டம் முஸ்லிம் பெரும்பான்மை (36,843 - 55 விழுக்காடு) மாவட்டமாக இருந்தது. தமிழர் (24,733 - 37 விழுக்காடு) இரண்டாவதாகவும் சிங்களவர் (4,762 - 07 விழுக்காடு) மூன்றாவதாகவும் இருந்தனர். 1921 ஆம் ஆண்டு குடி மதிப்பீட்டின் படி முஸ்லிம்கள் 31,943, தமிழர் 25,203, சிங்களவர் 7,285 ஆக இருந்தனர். 1953 இல் முஸ்லிம் 37,901, தமிழர் 39,985, சிங்களவர் 26,459 ஆக இருந்தனர்.

1963 ஆம் ஆண்டில் முஸ்லிம்கள் 46.11 விழுக்காடாகவும், சிங்களவர்கள் 29.28 விழுக்காடாகவும், தமிழர் 23.85 விழுக்காடாகவும் காணப்பட்டனர். ஆனால் 2007 ஆம் ஆண்டு சிங்களவர்கள் 37.49 விழுக்காடாக அதிகரித்து விட்டனர். அதேவேளை, தமிழர்கள் 18.34 விழுக்காடாக வீழ்ச்சியடைந்துள்ளனர். முஸ்லிம்கள் 43.99 விழுக்காடாகக் குறைந்துவிட்டனர். கீழ்க்கண்ட அட்டவணை அம்பாரை மாவட்டத்தின் குடிப்பரம்பலில் ஏற்பட்ட மாற்றத்தைக காட்டுகிறது.

-நக்கீரன்-

Back to News   Bookmark and Share Seithy.com

  • Welcome
  • Welcome
NIRO-DANCE-100213
Canada Kanthasamy Kovil
Ramans2011
Mahesan supramaniyam 031109
INNSYS-20120930
Suresh-remax-2013-01-01
RoyaShades-l2011(04-12-11)
TDE_Computers2011
TamilsGuid-191012-2013
      www.seithy.com      Copyright © 2010 - Contact Us at : infoseithy@gmail.com