Untitled Document
முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | தொடர்பு | சினிமா | படத்தொகுப்பு
May 25, 2013 [GMT]
  • Welcome
  • Welcome
டெசோ மாநாடு - கருணாநிதிக்கு ஈழத்திலிருந்து ஒரு அகதியின் கடிதம்... சூனியர் விகடன்
[Monday, 2012-08-13 21:59:31]
News Service

மதிப்பிற்குரிய கருணாநிதி அவர்கட்கு,
எங்கள் மீது தாங்கள் கொண்டிருக்கும் பேரன்பு எங்களைச் சிலிர்க்க வைக்கிறது. எங்கள் துன்பத்திலும், துயரத்திலும் நீங்கள் காட்டும் அக்கறையின் தீவிரம் எம்மை வியக்கவைக்கிறது.

  

எப்படி உங்களால் மட்டும் இது முடிகிறது? தள்ளாத வயதிலும் தார்மீக உணர்வோடு தமிழீழம் காணப் புறப்பட்டிருக்கும் புதிய புறநானூறு வீரத்தலைவனே!

தங்களுக்கு நிகர் தாங்களே தான்.

கந்தக வெடிப்பில் உடல் சிதற, செங்கழுநீர் வன்னி மண்ணில் காட்டாறாக ஓட, எம்மவர் உயிர்கள் இடம்பெயர்ந்து பறக்க - இந்த அவலங்கள் கண்டு துடிதுடித்தெழுந்து நீங்கள் சுழற்றிய வாளின் வீச்சு கண்டு திகைத்துத்தான் போய்விட்டோம் ஒரு போது.

உலகத்தமிழரின் தலைவனாக முடி தரித்து, செங்கோல் ஏந்தி அரியாசனத்தில் வீற்றிருக்க தங்களை விட்டால் யாருக்கு தகுதி இங்கு உண்டு.

காலைச் சிற்றுண்டிக்கும் மதியபோசனத்திற்கும் இடையே நீங்கள் இருந்த "சாகும்வரை உண்ணாவிரதம்" சரித்திரத்தில் 'பிளாட்டினம்' எழுத்தில் பொறிக்கப்பட வேண்டியது. எமது வரலாற்றாசிரியர்களின் எழுது கோலை "சாணை" கொண்டு தீட்டி கூர்மையாக வைத்திருக்க வேண்டும். உங்களின் வரலாறு 'கூர்'மையாகப் பதிவு செய்யப்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். முனை மழுங்கிய எழுத்தாணிகள் தங்கள் பிளாட்டினக் காலவரலாற்றைச் சேதப்படுத்தி விடக் கூடாதல்லவா? தமிழின உணர்வாளர்களுக்கு ஒரு முன்னோடி தாங்கள். திராவிட பாரம்பரியத்தின் பெருமையினையும் தமிழின் தொன்மையையும் உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டிய முன்னோடிகளில் இன்றுவரை உயிரோடிருப்பவர் நீங்கள் மட்டும் தான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து முன் தோன்றிய எம் மொழியின் தொன்மைச்; சிறப்புக்களை, அம்மொழியின் மூத்த குடிகளின் சீரார்ந்த வாழ்வின் பண்பாடுகளை உங்கள் எழுத்து மூலமும் பேச்சுக்கள் மூலமும் முரசறைந்து நிறுவியவர் தாங்கள். தமிழுக்குள்ளே அதன் முறையான பிரயோகங்களிலே எத்துணை அழகும் இனிமையும் இருக்கிறது என்று எடுத்துக் காட்டியவர் தாங்கள்.

தமிழ் கொஞ்சும்;

தமிழ் ஆனந்தம் பாடும்;

தமிழ் காதல் செய்யும்;

தமிழ் கோபப்படும்;

தமிழ் இரங்கும்;;

பொங்கும், நெருப்பாய் மாறும், சுவாலையாய் எரிக்கும், எரிமலையாய் வெடிக்கும், தீமையைப் பொசுக்கும்.

இவற்றைத் தங்களின் தமிழ் பிரயோகங்களிலிருந்து நாமறிந்தது. தமிழின் பெயரால் கம்பனை, இளங்கோவை, பாரதியை நாமறிந்ததை விட கருணாநிதியை நாம் அறிந்தது அதிகம்.

தந்தையின் கையைப் பிடித்து தளர் நடையில் ஆரம்பப்பள்ளி சென்று 'அ,ஆ' எழுதிப் பழகும் காலத்திலே இலங்கை வானொலியில் 'மனோகாரா' திரைப்படத்தின் வசனங்களைக் கேட்டவன் நான். அப்போது ஏதும் புரியாத போதும் தமிழின் மீது தீராக் காதல் கொண்ட எந்தையும் தாயும் மனோகரா திரை வசனத்தைச் சிம்மக் குரலோனின் கர்ச்சனையில்; கேட்டு அதை சிலாகித்துப் பேசும் போது "கருணாநிதி" எனும் பெயரை காதுகளில் வாங்கியவன் நான்.

காலவேகத்தில், விபரம் அறியும் வயதின்போது 'நானும்' என்னைப் பெற்றவர்கள் போல் மெய்மறந்து நின்றது உண்டு; தங்கள் வசனங்களைக் கேட்டு.

வெளிப்படையாகச் சொல்வதானால் தங்களது தமிழைக் கேட்டே தமிழ் மீது 'காதல்' கொண்டவன் நான்.

தமிழுக்கும் தமிழருக்கும் ஒரே தலைவன் 'கருணாநிதி' தான் என என்னளவில் நம்பவும், மற்றவர்க்கு நம்பிக்கையூட்டவும் என்னை முனையச் செய்தது தங்களது தமிழ் தான். தங்கள் மீது கொண்ட பற்றினால் தங்கள் கண்களை அலங்கரிக்கும்(?) விழிக்கண்ணாடி போன்றதொன்றை தந்தையைச் சிரமப்படுத்தி அங்காடிகளில் அலையவிட்டு வாங்கி வைத்திருந்தவன் நான்.

பெரியவனாகி திருமணம் செய்து குழந்தைகளைப் பெற்றபோதும் - அந்தக் கண்ணாடி மட்டும் புது மெருகு மாறாமல் என் பொக்கிசப்பெட்டியில், பெறுமதியான பேழையொன்றில் தனி சாம்ராஜ்யத்தையே நடாத்திக்கொண்டிருந்தது.

எனது குழந்தைகளுக்குக் கூட அந்தக் விழிக்கண்ணாடியையும், தங்களது புகைப்படத்தையும், சந்தர்ப்பம் கிடைக்கும் போது வர்ணத்தொலைக்காட்சியில் (இலவசமாகக் கிடைத்தது அல்ல) வரும் தங்கள் பிரதிமைகளையும் காட்டி திரைப்படங்களையும் காட்டி கருணாநிதி புகழ்பாட தவறியவனல்ல நான்.

அந்த கறுப்புக்கண்ணாடி போர் இடப்பெயர்வுகளின் போது தொலைந்து போனது என் பொக்கிசங்களைப் போலவே; எனதும் என் இனத்தினதும் கனவுகள் போலவே...!!

எனது பொக்கிசங்கள் தொலைந்ததற்கும், எம் கனவுகள் அழிந்ததற்கும் இன்றுவரை இரத்தக் கண்ணீர் வடிக்கின்றேன் - விழிக்கண்ணாடி தொலைத்ததற்கு அல்ல. தொலைந்தவற்றை இன்றும் தேடுகின்றேன். "கறுப்புக்" கண்ணாடியையும் கூட. என்ன முரண்நகையாகத் தெரிகிறதா?

ஒருவேளை எனது தேடுதல் வேட்டையின் போது அந்தக் கண்ணாடி கண்டுபிடிக்கப்பட்டால்......... மீண்டும் பாதுகாக்க மாட்டேன். மாறாக என் காலில் போட்டு மிதித்து உடைப்பேன். உடைந்த அந்தத் துகள்களை ஒரு பொலித்தீன் பையிலிட்டு எனது வீட்டு வரவேற்பறையில் வைப்பேன், துரோகச்சின்னமாக.

ஒரு தேசிய இனத்தின் உரிமைக் கோரிக்கையை நிர்மூலமாக்கிய துரோகத்தின் அடையாளம் அது.

நம்பிய ஈழத் தமிழ் மக்களின் முதுகில் குத்தி குப்புறச் சாய்த்த சுயநல வெறியின் அடையாளம்! 'காப்பாற்றுங்கள்' என அவலக் குரலெடுத்துக் கதறி அபயம் கேட்டு நீட்டிய கைகளை குறுகத் தறித்தெறிந்த அரசியற் துரோகத்தின் அடையாளம்!

அண்ணாவை விட, ராஜாஜியை விட, காமராஜரை விட உண்மையில் தாங்கள் பெரும் புத்திசாலி தான்.

பாவம் அவர்கள் பிழைக்கத் தெரியாதவர்கள். வங்கி இருப்பில் சேமிப்பேதும் இல்லாமல் செத்துத் தொலைத்தவர்கள் அவர்கள். கருணாநிதியின் சாதுரியம் அவர்களுக்கு இருந்திருந்தால் அவர்களது சந்ததியினர் இன்று "கோடி"களில் புரண்டிருப்பார்கள்; தங்களது சந்ததியினரைப் போலவே.

8ஆம் வகுப்புக் கல்வியையே இடைநடுவில் முறித்துக் கொண்டு, தற்குறியாக இரயில் (அல்லது பேரூந்து) கட்டணத்தை மட்டுமே சட்டைப்பையில் கொண்டு, 'பெரியாரின்' முகாமுக்குத் தொண்டனாக வந்து, - இன்று பல்லாயிரம் கோடி ரூபா மோசடி ஊழலில் பெயர் அடிபடும் அளவுக்கு உயர்ந்து விட்ட உங்கள் "தமிழ்ப்பணி" அவர்களுக்குக் கைகூடி வரவில்லை. உண்மையிலேயே தாங்கள் மேதாவி தான்.

நீங்கள் கொண்ட இலட்சியத்தை அடைந்து விட்டீர்கள் இனியுமென்ன நாடகம்? இனியும் ஏன் வேசங்கள்? உலகளந்த பெருமாளுக்கும், உலக நாயகனுக்கும் ஆகக்கூடியது பத்து அவதாரங்கள் தான். ஆனால் தங்களுக்கு....

எத்தனை முகங்கள்?

மாநில அரசியலில், மத்திய அரசியலில், குடும்ப அரசியலில், வர்த்தக அரசியலில், புலம்பெயர் ஈழத்தவர் அரசியலில், சினிமா அரசியலில், சுயமரியாதை அரசியலில், ஆன்மீக அரசியலில், சிறை அரசியலில், ஊழல் அரசியலில், ஊடக அரசியலில் இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். போயின் பக்கங்களும் போதாது; எனது ஞாபகசக்தியும் போதாது. இவ்வாறு ஒவ்வொரு அரசியலிலும் ஒன்றுக்கு மேற்பட்ட முரண்பாடான, முரண்நகையுள்ள அவதாரங்கள் அவற்றுக்கு பூசிய அரிதாரங்கள்.

இந்த அரிதாரங்கள் நாட்பட்டு, கலைந்து வழிந்து நாற்றமும் வீசத் தொடங்கியதின் பின்பும், மீண்டும் நீங்கள் கதாயுதத்துடன் மேடையேற இந்தத் தள்ளதா வயதிலும் நினைப்பது தான் சற்றும் இரசிக்க முடியாமல் உள்ளது.

'உங்கள் அவதாரம் கலைந்து போனது ஈழத்தமிழனின் குருதியிலே' என்பதை நாமுணர்ந்து பல காலமாகி விட்டது.

'உங்கள் கூத்து மேடை சரிந்து போனது எங்களது சாவிலே' என்பதைத் தாங்கள் உணர இன்னும் வெகுகாலம் பிடிக்குமோ?

"விடுதலைப் புலிகளை ஆதரிக்கமாட்டேன், ஆனால் தமிழீழம் மலர்ந்தால் மகிழ்ச்சியடைவேன்" என்று தாங்கள் கூறியபோது, அதிலுள்ள முரண்நகையை தங்கள் மீது கொண்டிருந்த அபிமானம், எம் புலனுணர்வுக்கு மறைத்து விட்டது.

தமிழ்ச்செல்வனின் சாவிற்கு நீங்கள் வரைந்த கவியாஞ்சலி, அதற்கு நாம் இசைப்பாடல் வடிவத்தை ரி.எல்.மகாராஜன் குரலில் வழங்கி, பட்டிதொட்டி எல்லாம் ஒலிக்கச் செய்து மெய்யுருகிக் கண்ணீர் விட்டோமே... அப்பொழுதும் நாம் தங்களின் முடைநாற்ற அரிதாரப்பூச்சுக்களைக் கண்டுபிடிக்கவில்லை நாம்.

காலை உணவு அருந்தி விட்டு, அண்ணா சிலையடியில் திடீரென நீங்கள் மேற்கொண்ட சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம், ஏற்கனவே எம் இதய வாயிலருகில் வீற்றிருந்த உங்களை இதய கர்ப்பக்கிரகத்துக்குள்ளே உங்களை குடியமரச் செய்தது. "அந்தப்புரம்" உட்பட தங்களது சகல பரிவாரங்களும் குளிரூட்டி பொருத்திய சொகுசு பெருவாகனத்துடன் தங்கள் சாவைக் காணக் கால்கடுக்கக் காத்திருக்கும் செய்தி எம்மை உருக வைத்தது.

. எறிகணைகளுக்கும், விமானக்குண்டுகளுக்கும், சீறிவரும் கனரகத் துப்பாக்கிச் சன்னங்களுக்கும் அஞ்சி குழந்தை குட்டிகளோடு எம்முடன் இடம்பெயர்ந்து கூடவே வந்த ஆட்டுக்குட்டி, நாய் போன்றவற்றையும் அருகிலே வைத்துக் கொண்டு பதுங்கு குழிக்குள் நாமிருந்த வேளை; காற்றிலே கலந்து வந்த செய்தி தான் தாங்கள் எடுத்த உண்ணாவிரத அவதாரம்.

சக்தியிழந்து செயலற்றிருந்த மின்கலங்களுக்கு பற்களால் கடித்தும், கற்களால் தட்டியும் அவற்றின் உருளை வடிவத்துக்கு நவீன சிற்பங்களைப் போல வினோதமான நெளிந்த வடிவங்கள் கொடுத்து, சற்று உசுப்பி அவை மூலம் வானொலியில் வரும் தங்கள் செய்திக்காக செவிமடுத்துக் காத்திருந்தவேளை "ஏதாவது நடக்கும்" "நல்ல செய்தி வரும்" "எம்மை காப்பார் உலகத் தமிழர் தலைவர்" என நம்பிக்கையுடன் நாம் காத்திருந்த வேளை....

வந்ததையா நற்செய்தி! காலை உணவுக்கும் மதிய உணவுக்கும் இடையே நடந்த மிகத் தீவிரமான சாகும் வரையான உண்ணாவிரதப் போருக்கு மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் உருவிலே வந்தது தீர்வொன்று.

"கனரக ஆயுதப்பாவனை நிறுத்தம்" "போர் நிறுத்தம்" "இனி ஈழத்தமிழர் வாழ்வில் விடிவு"

தமிழக முதலமைச்சரின் சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டம் வெற்றிகரமாக நிறைவு

பலவீனமான மின்கலத்தால் முனுமுனுப்பாகக் கேட்ட வானொலியின் அறிப்பில் கூட திடீரென சக்தி கூடியதான உணர்வு எமக்கு "வெற்றி....வெற்றி..... தமிழர் தலைவன் கருணாநிதி எம்மைக் காப்பாற்றி விட்டார்."

குதூகலத்துடன் கூவியபடி குஞ்சு குருமான்களுடன் பதுங்குகுழியிலிருந்து பாய்ந்து வெளியே வந்தோம்.

ஆடவேண்டும்...... பாடவேண்டும்...... மனம் மகிழ்ச்சியில் துள்ள ஒருவரை ஒருவர் அணைத்துக் கொள்ள......

வந்ததையா எறிகணைகள்.....

கொள்ளை கொண்டு போனதையா எம்மவர் உயிர்களை.

தொடர்ந்தும் இந்திய வனொலியில் "கருணாநிதி ஈழத்தமிழரைக் காத்து அருள்பாலிக்க வந்த தேவதை. வெற்றி வாகை சூடி ஈழத்தமிழர் தலையிலே முடி சூட வந்த கருணைக்கடல்."

இப்படியாக......... இப்படியாக......... தொடர் புகழாரங்கள்!

நாம் கண்ணீரில் மிதந்தோம், இந்த நயவஞ்சகத்தை எதிர்த்துக் கருணாநிதி எனும் வீரத்தலைவன் தன் போர்க்;கலத்தைத் தூக்கப் போகிறார் என்று பலரும் எதிர்பார்த்தோம்.

அன்றைய தினம் மட்டும் காவு கொள்ளப்பட்ட உயிர்களின் எண்ணிக்கை நூற்றுக்கு மேலாகும்.

ஆனால் அவ்வளவு தான்.

நம்பிக்கை கானல் நீரானது. கருணாநிதியின் முடிவு - மத்திய அரசின் முடிவைச் சார்ந்ததே என்றானது. ஆவியே வெந்து போனது.

எம்மால் என்ன செய்ய முடியும்?

கருணாநிதி நினைத்திருந்தால்; மத்திய அரசில் அவரது கட்சிக்கிருந்த பலத்தைக் கொண்டு ஈழத்தமிழரைக் காத்திருக்கலாம்.

அவர் தம் வாழ்வியல் உரிமைக்கான அரசியல் வேணவாவைப் பேணி இருக்கலாம். எம்மைக் காக்கும் கவசமாக தமிழ் நாட்டையே மாற்றி இருக்கலாம்.

எனினும் நாம் நம்பிக்கை இழக்கவில்லை. தமிழகம் தொப்புள் கொடி உறவு. கருணாநிதி அதன் முதலமைச்சர். அவரது தலைமையில் எம்மை மீட்க தமிழகம் திரளும். எம்மைக் காத்து அணைத்து ஆறுதல் சொல்ல ஓடோடி வருவார் உலகத் தமிழர் தலைவன் என இன்னும் நம்பினோம். அவரது மௌனம், எம்மைக் காக்கும் இராஜதந்திரமாக இருக்கலாம் எனும் ஒர் நப்பாசை.

"ஓடினோம்.. ஓடினோம், வாழ்க்கையின் ஒரத்துக்கே ஒடினோம்." அந்த ஓரம் தான் முள்ளி வாய்க்கால் கடல் - ஒரம். பாராசக்தியின் பார்வதிக்காவது நியாயம் கேட்க குணசேகரன் என்ற அண்ணன் இருந்தான். அவன் பக்கம் பக்கமாக வசனம் பேச நீதிமன்றமும் இருந்தது. கேட்க நீதியரசரும் இருந்தார்.

எனினும் எமக்கு...?

"தண்ணீர் விட்டா வளர்த்தோம் சர்வேசா.... செந்நீரால்;;' காத்தோம்..... கருகத் திருவுளமோ..."

ஏக்கத்துடன் வங்கக்கடலின் வானம் தொடு எல்லையை, அந்த நீண்ட விளிம்பைப் பார்த்திருந்தோம். ஏமாற்றம்! எம்மைக் காக்க எவரும் வரவில்லை. எம் குரல் கேட்கவும் எந்த நீதிமன்றமும் தயாராக இருக்கவில்லை.

356 என்ற சட்டப் பிரிவின் மீதான பயமா இது?

கலைஞரே! உங்களது சிலவருட பதவி நாற்காலிகளைப் பாதுகாப்பதற்காக ஒரு தேசிய இனத்தின் அழிவுக்குத் துணை போக உங்களால் எப்படி முடிந்தது?

அன்று பதவிகளைத் தூக்கி எறிந்து இந்திய அரசுக்குப் பாடம் புகட்டி எம்மைக் காத்திருந்தால் இன்று நீர் அல்லவோ உலகத் தமிழர் தலைவர். இப்படி அவமானகரமான தோல்விகளையும் இனத்துரோகி என்ற அவப்பெயரையும் சந்திக்க நேர்ந்திராது அல்லவா!

ஆட்சிக் கதிரையை மட்டுமல்ல, எதிர்க்கட்சித் தலைவர் என்ற தகுதி நிலையையே இழக்க வேண்டிய அவலநிலை வந்திராது அல்லவா?

தமிழ் நாட்டு அரசியல் வரலாற்றிலேயே அறிஞர் அண்ணாவினால் உருவாக்கப்பட்ட தி.மு.க என்ற புரட்சிக்கட்சி, இத்துணை தாழ் நிலைக்கு என்றுமே சென்றதில்லை.

'தானாடாது விட்டாலும் தன் தசை ஆடுமாமே..' வன்னிமண்ணின் இடப்பெயர்வு அவலங்கள் காணொளி இறுவெட்டுக்களாகத் தமிழ்நாட்டை அடைந்த போது தமிழகமே பொங்கி எழுந்ததாமே!

அப்போதும் கூட உங்கள் கண்ணில் கூட ஈரக்கசிவு ஏற்பட்டதாமே..?

அப்போதும் கூடத் தங்கள் கபட மூளை அந்த உணர்வெழுச்சிகளை உங்கள் குடும்ப, அரசியல் நலன்களுக்கான முதலீடுகளாக்கிக் கொண்ட சாமர்த்தியம் வேறு எவருக்கு வரும்?

கல்விச்சமூகம், சினிமாத்துறை, தொழில்துறைகள் எனப் பல்வேறு தரப்பட்டத் தமிழ்நாட்டு உறவுகளின் உண்மையான அக்கறையைக் கையாள, அவர்களின் பிரதிநிதியாக மீண்டும் ஒரு அரிதாரப்பூச்சு.

பதவி விலகல் கடித நாடகங்கள்.

கொட்டும் மழையில் மனிதச் சங்கிலிப் போராட்ட நாடகங்கள்.

இப்படி எத்தனை..... எத்தனை..?

முத்துக்குமாரன் முதலானோரின் அக்கினிச் சங்கமங்கள் கூட உங்கள் அரசியல் கபட நாடகத்துக்கு உரமாக்கப்பட்டன. இத்தனை போராட்டங்களும் ஈழத்தமிழ் அகதிகளுக்கு விடிவினைப் பெற்றுத்தருவதற்குப் பதிலாக மத்திய அரசில் கருணாநிதியின் அரசியல் சார்ந்த சலுகைகளையே வென்றுகொடுத்தன. சில வருடங்கள் ஆட்சியையும் தாக்குப்பிடித்துத் தக்க வைக்க முடிந்தது.

தங்கள் நாடகங்கள் முடியுமுன்னே பூசிய அரிதாரப்பூச்சுக்கள் உங்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தி இன்று சொறிந்து கொண்டிருக்கும் நிலையில் நீங்கள்.

கட்டபொம்மனுக்கு எட்டப்பன்! பண்டாரவன்னியனுக்குக் காக்கை வன்னியன்! ஈழத்தமிழருக்குக் கருணாநிதியா..?

எம்மை வீழ்த்தும் கூட்டுச்சதிக் கூட்டாளிகளில் தாங்களும் ஒருவன் என்பதை நாம் நன்கு அறிவோம்.

எனினும் அந்தச் சதி அம்பலமானதைப் பூசி மெழுக, நீங்கள் சொன்ன காரணங்கள் இருக்கிறதே; அப்பப்பா... பொய்யின் மொழிப்புலவர் தாங்கள்.

கனிமொழியைச் சிறைக்கூண்டுக்குள் சந்தித்தபோது நா தழுதழுத்ததாமே, கண்ணரும் கசிந்ததாமே.

ஊழல் செய்து ஆயிரக்கணக்கான கோடி ரூபாக்களைக் கபளீகரம் செய்த குற்றச்சாட்டில் அடைக்கப்பட்ட கனிமொழியின் தந்தைக்கு மகளிருந்த கம்பிக்கூண்டு கண்ணீரை வரவழைத்தது என்றால்.....

இங்கே இந்த மண்ணிலே வாழும் உரிமையைக் கேட்டதால் கொத்துக் கொத்தாக மடிந்து போன பிள்ளைகளின் தாய் தந்தையரின் கண்களில் என்ன வரும்..?

இதை உணராதவர் போல், ஒன்றுமே தெரியாதவர் போல், ஈழத்தமிழர் வீழ்ச்சிக்குச் சகோதர இயக்க மோதல்களே காரணம் என நாம் எப்போதோ மறந்து போனவற்றை இன்று ஞாபகம் வைத்துப் பேசும் முன்னாள்; முதல்வர் கருணாநிதி - அந்தச் சோற்றுக்குள்ளே தன் துரோகம் எனும் முழுப்பூசனியை மறைக்க நினைப்பது தான் வேடிக்கையானது.

இந்த நிலையில் மீண்டும் சில நாடகங்களின் அறிவிப்புகள்.

"தமிழீழம்

"டெசோ

என்ன இவை....? வரலாற்று நாடகங்களா..?

இருபத்தோராம் நூற்றாண்டில் மட்டுமல்ல் இனி வரப்போகும் சில நூற்றாண்டுகளுக்கும் இதுவே பெரும் நகைச்சுவையாக இருக்க முடியும்.

உண்ணாவிரத நாடகத்தைப் போல் ஒரு ரெசோ மாநாட்டு நாடகம். உச்சக்கட்டக் காட்சியாக தமிழீழத் தீர்மானம். பரபரப்பாக ஒத்திகை பார்க்கப்பட்ட இந்த நாடகம் எதை இலக்காகக் கொண்டது என்பதை யார் அறியாவிட்டாலும் ஈழத்தமிழர் நாம் அறிவோம். அதனால் நாம் பரபரப்படையவில்லை..... சிலிர்க்கவில்லை. வேடிக்கை மட்டுமே பார்த்தோம்.

"உண்ணாவிரத" நாடகத்தில் வந்தது போலவே உச்சக்கட்டக் காட்சி. மத்திய அமைச்சர் சிதம்பரம் வருகை!"

அதே நாடகத்தில் வந்தது போலவே இறுதி முடிவு..... பிசுபிசுப்பு.....! தாங்கள் தமிழீழம் என்று முணுமுணுக்கும் போதே எமக்குப் புல்லரிப்பை ஊட்டவில்லை. மிகப்பெரும் கோமாளித்தனமாகவே தெரிந்தது.

முடிவு எப்படியிருக்கும் என்று புரிந்ததால் மயிர்க் கூச்செறிவு எதுவுமில்லை.

அதிலும் உச்சக்கட்ட நகைச்சுவை என்னவென்றால்;; ஈழத்தமிழர் மீள்குடியேற்றம், வாழ்வாதாரம் பற்றித் தாங்கள் பேசுவது! அக்கறை காட்டுவது! அது மட்டுமல்ல உங்களது நேர்மையை நிரூபிக்க எமது தமிழ்த்தேசியக் கூட்டமைப்புத் தலைவர்களையும் அழைத்திருப்பதாகச் சொன்னது.

உங்களுக்கு ஒன்று தெரியுமா கலைஞரே...? உங்களை விடப் பெரிய நடிகர்கள்; எமது அரசியற் தலைவர்கள். அவர்கள் எம்மைக் கைவிட்டு நீண்ட காலமாகிவிட்டது தெரியுமா...?

உங்களது மாநாட்டில் அவர்கள் பங்குபற்றுவது இருதரப்புக்கும் அவரவர் தரப்பு மக்களை ஏமாற்ற உதவக்கூடுமே தவிர எமது வாழ்வில் எந்த விடிவையும் கொண்டு வந்துவிடப் போவதில்லை.

நாமும் கட்டப்பட்டு கடலில் தான் போடப்பட்டுள்ளோம்..... எம்மால் கட்டுமரங்களாக மிதக்க முடியவில்லை. எந்தக் கட்டுமரங்களும் எம்மை கரைசேர்க்க வரவில்லை.

இதுவரை காலமும் இடம்பெயர்ந்து அல்லலுறும் எமக்காக தங்கள் 'கஜானா' விலிருந்து ஒரு ரூபாய் கூட கொடுக்க மனம் வராதவர் நீங்கள். தமிழைச் செம்மொழியாக்கி விட்டுத் தமிழனைக் கொன்றொழித்தவர் நீங்கள். உண்மையில் நீங்கள் எங்களுக்கு உதவி செய்ய விரும்பினால் இதய சுத்தியுடன் வாருங்கள். எமது காயங்கள் ஆற்றமுடியாதவையானாலும் எம்மைத் தேற்றலாம். உங்கள் உண்மையான மனமாற்றம் எமது இனத்தின் மீளெழுச்சிக்கு, ஆரோக்கியமான எதிர்காலத்துக்கு உதவுமேயாக இருந்தால் - கடந்தகாலத்தை மறக்க முடியாவிடினும் கூட மன்னிக்கவாவது செய்யும் மனிதத்துவம் இன்னும் எங்களிடம் இருக்கிறது.

தயவுசெய்து எம்மைப் பகடைகளாக்கி விளையாடாதீர்கள்.

ஏனெனில் நாம் மனிதர்கள்.

எங்கள் வாழ்வுரிமைக் கோசத்தை உங்கள் மூலதனமாக்காதீர்கள்.

ஏனெனில் அது எமது இனத்தின் இருப்பு.

சுருக்கமாகச் சொல்வதாக இருந்தால்......

எம்மை வாழ விடுங்கள்.

இவ்வண்ணம்

ஈழத்தமிழ் அகதி.

Back to News   Bookmark and Share Seithy.com

  • Welcome
  • Welcome

இளம் பெண்ணை மிரட்டி பல தடவை பாலியல் வல்லுறவு - படத் தயாரிப்பாளர் கைது!
[Saturday, 2013-05-25 14:30:48]

யுவதியொருவரை தொடர்ச்சியாக மிரட்டி வல்லுறவுக்குட்படுத்தி வந்த பிரபல திரைப்பட தயாரிப்பாளரொருவரை நாரஹெம்பிட்டி பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த யுவதி அதுருகிரிய பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதானவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. யுவதி சினிமாவில் நடிப்பதற்காக தயாரிப்பாளரிடம் வந்துள்ளதாகவும் அவருக்கு வாய்ப்பு தருவதாகக் கூறி அவரை நிர்வாணமாக படமெடுத்து பின்னர் அதனை வெளியிடப்போவதாக மிரட்டியே குறித்த நபர் தொடர்ச்சியாக வல்லுறவுக்குட்படுத்தியுள்ளார்.



முக்கோண பாதையில் 3 கோள்கள் - இலங்கையர்கள் பார்வையிடலாம்!
[Saturday, 2013-05-25 14:27:24]

சூரியனை சுற்றியுள்ள கோள்களில் மூன்று கோள்கள் முக்கோண பாதையில் தற்போது சுற்றிவருவதை வானத்தில் பார்க்கலாம் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பௌதீக விஞ்ஞான பிரிவின் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்தார். இரவில் வானத்தில் தெட்டத்தெளிவாக தெரிகின்ற சனி, கோள்மண்டத்தில் மிகப்பெரிய கோளான வியாழன் மற்றும் சூரியனுக்கு மிகவும் அண்மையில் இருக்கின்ற புதன் ஆகிய கோள்களே முக்கோண பாதையில் சுற்றிவருகின்றன. இலங்கையின் வடமேல் வானத்திலேயே இதனை பார்க்க முடியும் என்று தெரிவித்துள்ள பேராசிரியர் சந்தன ஜயரத்ன இது போன்றதொரு நிகழ்வை 2021 ஆம் ஆண்டே பார்க்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.



23வது ஐ.நா மனித உரிமை பேரவை கூட்டத்தொடர் திங்களன்று ஆரம்பம்!
[Saturday, 2013-05-25 14:21:40]

ஜெனீவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் 23 ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது. எதிர்வரும் ஹூன் மாதம் 14 ஆம் திகதிவரை நடைபெறவுள்ள இந்த 23 ஆவது கூட்டத்தொடரின் அமர்வுகளின் போது நாடுகளின் மனித உரிமை நிலைமைகள் குறித்து ஆராயப்படவுள்ளதுடன் பல்வேறு நாடுகள் தொடர்பில் பிரேரணைகளும் முன்வைக்கப்படவுள்ளன. 47 உறுப்பு நாடுகள் இந்தக் கூட்டத்தொடரில் கலந்துகொள்ளவுள்ளதுடன் மேலும் பலநாடுகளும் அவதானிப்பு நாடுகளாகவும் கலந்துகொள்ளவுள்ளன.



ஈழத்தமிழருக்கு ஆதரவான கட்சி விரைவில் புதுடில்லியில் உதயமாகும் - தா.பாண்டியன்!
[Saturday, 2013-05-25 14:13:19]

புதுடில்லியில் விரைவில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான ஆட்சி நிச்சயம் அமையும். எதிர்வரும் இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் அது வெளிப்படும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் தா.பாண்டியன் தெரிவித்துள்ளார். நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை சென்னையில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவுதின நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரை நிகழ்த்துகையிலேயே பாண்டியன் இதனைத் தெரிவித்தார். ஈழத் தமிழர்களுக்கு ஆதரவுமிக்க ஆட்சியொன்று புதுடில்லியில் வெகுவிரைவில் அமையும் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு. அதன் மூலம் ஈழத் தமிழர் பிரச்சினைக்கு நியாயமான தீர்வினை விரைவாக எட்டுவதற்கான அழுத்தத்தை இலங்கை அரசுக்கு கொடுக்க முடியும் என்றும் பாண்டியன் தனது உரையில் குறிப்பிட்டார்.



13வது திருத்தச் சட்டம் தொடர்பில் கருத்துக் கூறுவதற்கு கோத்தபாயவிற்கு அதிகாரமில்லை - வாசுதேவ நாணயக்கார!
[Saturday, 2013-05-25 14:04:31]

13வது திருத்தச் சட்டம் தொடர்பில் கருத்துக்களை தெரிவிப்பதற்கு பாதுகாப்பு செயலாலர் கோத்தபாய ராஜபக்சவிற்கு அதிகாரமோ உரிமையோ கிடையாது என்று மொழி மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். அரசியலமைப்பின் 13வது திருத்தச் சட்டத்திற்கு எதிராக ஜாதிக ஹெல உறுமயவினால் முன் வைக்கப்படவுள்ள தனி நபர் பிரேரணை செல்லுபடியற்றதாகும். எனவே, அரசு மேற்படி பிரேரனைக்கு அங்கீகாரம் வழங்காது என்று மொழி மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.



மட்டக்களப்பு நுழைவாயிலில் வைக்கப்படும் புத்தர் சிலை இனங்களுக்கிடையே மனக்கசப்பை ஏற்படுத்தும் - யோகேஸ்வரன் எம்.பி பிரதமருக்கு கடிதம்!
[Saturday, 2013-05-25 13:57:56]

மட்டக்களப்பு நகரின் வடக்கு நுழைவாயில் நெடுஞ்சாலையோரத்தில் புத்தர் சிலை நிறுவுவதற்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியானது இனங்களுக்கிடையில் மனக்கசப்பை ஏற்படுத்தும் செயலாகும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார். புத்தர் சிலையை நிறுவுதல் தொடர்பில் பிரதமர் தி.மு ஜயரட்னவிற்கு எழுதியுள்ள கடிதத்திலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,



கல்லுடன் கட்டப்பட்ட நிலையில் கிணற்றிலிருந்து இளம் பெண்ணின் சடலம் மீட்பு: முல்லைத்தீவில் சம்பவம்!
[Saturday, 2013-05-25 09:56:07]

முல்லைத்தீவு பனிச்சங்குளப் பகுதியில் பாலியல்வல்லுறவுக்கு உள்ளாகியிருக்கலாம் என சந்ததேகிக்கப்படும் நிலையில் கிணற்றில் இருந்து இளம் பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அடையாளம் தெரியாத நிலையில் இச் சடலம் இருப்பதாகவும் சடலத்திலுடன் கல்லுக்கட்டப்பட்டு போடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பிட்ட சடலம் தற்போது கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கிளிநொச்சி வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



ஆஸிக்கு செல்ல முயற்சித்த 21 இலங்கையர்கள் கேரளாவில் கைது!
[Saturday, 2013-05-25 09:30:44]

சட்டவிரோதமாக ஆஸ்திரேலியாவுக்குத் தப்பிச் செல்ல முயன்ற 21 இலங்கை அகதிகள் இந்தியாவின் கேரளா மாநிலத்தின் ஏர்ணாகுளம் பிரதேசத்தில் வைத்து நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழக கியூ பிரிவு பொலிஸார் மற்றும் கேரளப் பொலிஸார் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைக்கப் பெற்ற தகவலின்படி இந்தச் சுற்றி வளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 7 ஆண்கள், 6 பெண்கள் மற்றும் 8 சிறுவர்கள் நியூகொச்சின் பகுதி ஹோட்டல் ஒன்றில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் சென்னையிலிருந்து ரயில் மூலமாக கேரளா சென்றுள்ளனர்.



திருகோணமலை நகரசபையுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்பாடு குறித்து அமெரிக்க அதிகாரிகளிடம் விசாரணை செய்யவுள்ள இலங்கை அரசு!
[Saturday, 2013-05-25 09:14:17]

அமெரிக்க தகவல் நிலையத்தை அமைப்பது தொடர்பாக, திருகோணமலை நகரசபையுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்பாடு குறித்து, கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுரக அதிகாரிகளிடம் விளக்கம் கோர சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. திருகோணமலையில் பொது தகவல் மற்றும் செயற்பாட்டு நிலையத்தை (அமெரிக்கன் கோணர்) அமைப்பதற்கு கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம், திருகோணமலை நகரசபையுடன் கடந்த 22ம் நாள் உடன்பாடு ஒன்றைச் செய்து கொண்டது. இந்த உடன்பாடு குறித்து சிறிலங்கா வெளிவிவகார அமைச்சுக்குத் தெரியப்படுத்தப்படாதது சிறிலங்கா அரசாங்கத்துக்கு விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையிலேயே கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரக அதிகாரிகளிடம் விளக்கம் கோர சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு முடிவு செய்துள்ளது.



வடக்கு தேர்தலினில் பொருத்தமானவர்கள் நிறுத்தப்படவேண்டும்! - குமாரவடிவேல் குருபரன்!
[Saturday, 2013-05-25 08:44:20]

வடக்கு மாகாணசபை தேர்தலில் எவரையும் போட்டியிடக்கூடாதெனவும் பகிஸ்கரிக்கவேண்டுமெனவும் சிவில் சமூகம் வேண்டுகோள் விடுத்திருப்பதாக கூறப்படுவது தவறான தகவலென சிவில் சமூக அமைப்புக்கள் சார்பினில் குரல்தரவல்லவரான சட்டத்தரணி குமாரவடிவேல் குருபரன் தெரிவித்தார்.



ஜனநாயக பண்புகளைக் கொண்ட அரசாங்கம் ஆசியப் பிராந்தியத்திலே இலங்கையில்தான் உள்ளது - ஜனாதிபதி பெருமிதம்!
[Saturday, 2013-05-25 08:27:33]

ஆசியாவிலேயே ஜனநாயக பண்புகளை முழுமையாக பின்பற்றி நிலையான அரசாங்கமொன்றை உருவாக்கியுள்ள நாடு இலங்கைதான் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார். மஹரகம இளைஞர் சேவைகள் மன்ற அரங்கில் இரண்டாவது இளைஞர் பாராளுமன்றத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மேற்கண்"டவாறு குறிப்பிட்டார். ஜனாதிபதி தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது:-



3000 கிலோகிராம் இரும்புகள் கோப்பாயில் திருட்டு - நான்குபேர் கைது!
[Saturday, 2013-05-25 08:18:03]

யாழ்ப்பாணம், கோப்பாய் கோண்டாவில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 3000 கிலோகிராம் இரும்புகள் திருடப்பட்டுள்ளதாக சந்தேகத்தின் பேரில் நான்குபேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். களவாடப்பட்ட இரும்புகளில் 1800 கிலோகிராம் இரும்புகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த பொலிஸார். மீட்கப்பட்ட இரும்புகளில் பாரிய ஆயுதங்களின் உதிரிபாகங்களும் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இந்த ஆயுதங்கள் நேற்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.



வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவை ஈழத்தமிழர்களுக்கும் தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கும் இடையிலான ஒரு உறவுப் பாலம்! - நக்கீரன்
[Saturday, 2013-05-25 08:10:25]

தமிழர்களிடை ஒற்றுமை இல்லை, அவிழ்த்துவிட்ட நெல்லிக்காய் மூட்டை போல இருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டைப் பலர் முன் வைக்கிறார்கள். ஒற்றுமை என்பது ஒரு ஒப்பீட்டுச் சொல். நூற்றுக்கு நூறு ஒற்றுமை எந்த இனத்தவரிடமும் இல்லை. ஒற்றுமைக்குப் பெயர் போன யூதர்கள் பற்றி ஒரு பகிடி சொல்வார்கள். பத்து யூதர்கள் இருந்தால் பதினொரு கட்சிகள் இருக்குமாம். எல்லாம் வீட்டுக்கு வீடு வாசல்படி என்று சொன்ன கதைதான்.



விடுதலைப்புலிகள் தொடர்பில் பிரதியமைச்சர் முரளிதரன் விடுத்த கோரிக்கை அரசினால் நிராகரிப்பு!
[Saturday, 2013-05-25 08:10:06]

தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பில், பிரதி அமைச்சர் விநாகமூர்த்தி முரளிதரன் விடுத்துள்ள கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது. கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள புலி உறுப்பினர்களை விடுதலை செய்யுமாறு பிரதியமைச்சர் முரளிதரன் அரசாங்கத்திடம் கோரியிருந்தார். விமானங்கள் மீது தாக்குதல் நடத்தியமை, இராணுவ முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியமை, மக்களை கொலை செய்தமை உள்ளிட்ட பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 200 புலிஉறுப்பினர்கள் கைது செய்பப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். சிறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் மட்டும் பொது மன்னிப்பு அடிப்படையில் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.



இலங்கையைச் சேர்ந்த 16 புகலிடக் கோரிக்கையாளர்களை நாடுகடத்தியது அவுஸ்திரேலியா!
[Saturday, 2013-05-25 07:57:36]

சட்டவிரோதமாக படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்குச் சென்ற மேலும் 16 இலங்கையர்கள் நேற்று வெள்ளிக்கிழமை அந்நாட்டு அரசாங்கத்தினால் பலவந்தமாக நாடு கடத்தப்பட்டுள்ளனர். படகுகள் மூலம் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்குள் நுழைய வேண்டாம் எனத் தொடர்ச்சியாகக் கோரிக்கை விடுத்து வருகின்ற போதும், அக்கோரிக்கையை செவிமடுக்காது சட்டவிரோதமாக வந்த 16 பேரே இவ்வாறு நாடு கடத்தப்பட்டிருப்பதாக அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் பிரன்டன் ஓ கொன்னர் தெரிவித்தார். கடந்த வருடம் ஓகஸ்ட் மாதத்திலிருந்து சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்களை அவுஸ்திரேலியா நாடு கடத்தி வருகிறது.



பாதுகாப்புச் செயலாளர் பதவியை இராஜினாமா செய்து விட்டு கோத்தபாய அரசியல் பேசவேண்டும்: - சுரேஷ்பிரேமச்சந்திரன்
[Saturday, 2013-05-25 07:57:33]

13ஆவது திருத்தச் சட்டம் குறித்தோ காணி, பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பிலோ கருத்துக்கூறுவதற்கு பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு அதிகாரம் இல்லை. அவர் அரசாங்க அதிகாரியேயாவார். அரசியல் விடயங்கள் குறித்து பேசவேண்டுமானால் அவர் பாதுகாப்புச் செயலாளர் பதவியை இராஜினாமா செய்து விட்டு வரவேண்டும் என்று தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பேச்சாளரும், யாழ். மாவட்ட எம்.பி.யுமான சுரேஷ்பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.



முஸ்லீம்கள் மட்டுமல்ல சிங்களவர்களும் மாடு வெட்டுக்கிறார்கள்! Top News
[Friday, 2013-05-24 22:40:09]

மாடு வெட்டுவதை கண்டித்து இன்று கண்டி தலதா மாளிகைக்கு அருகில் புத்த பிக்கு ஒருவர் தீக்குளித்ததாக தினக்கதிரில் செய்தி வெளியானதை பார்த்த நேயர் ஒருவர் இந்த படத்தையும் அனுப்பி வைத்ததுடன் ஏன் சிங்களவர்கள் மாடு வெட்டுவதில்லையா என்ற கேள்வியையும் எழுப்பியிருந்தார். இலங்கையில் முஸ்லீம்கள் மட்டுமல்ல சிங்களவர்களும் மாடு வெட்டுகின்றனர். அதற்கான ஆதாரம் இதோ என இப்படத்தை அனுப்பியிருக்கிறார். இந்த புத்த பிக்கு எந்த உலகில் இருக்கிறார் என்ற கேள்வியையும் அவர் எழுப்பியிருந்தார்.



மட்டக்களப்பு கதிரவெளி விக்னேஸ்வரா மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற மாகாண மட்ட தமிழ் மொழித்தினப் போட்டி! Top News
[Friday, 2013-05-24 21:00:28]

மட்டக்களப்பில் நடைபெற்ற மாகாண மட்ட தமிழ் மொழித்தினப் போட்டியில்வாகரை கதிரவெளி விக்னேஸ்வரா மகா வித்தியாலயம் டெங்கை ஒழிப்போம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் கூத்து நிகழ்ச்சியில் முதலாம் இடத்தினைப் பெற்றுள்ளது. மனிதரைக் கொல்லும் கொடிய டெங்கு நோயை ஒழிக்கும் வகையில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக விசேட கூத்தாக இக்கூத்து தயாரிக்கப்பட்டது. மக்கள் மத்தியிலே டெங்கு நோய் சம்பந்தமாக சுற்றாடலை சுத்தமாக பேணுவது தொடர்பாக ஆலோசனை கூறப்படும் வேளையில் ஒரு சிலர் ஒத்துழையாமை, எதிர்ப்பு தெரிவித்தல், விமர்சனம் செய்தல் போன்ற வகைகளால் குறித்த நோக்கம் எட்டப்படவில்லை. இதே போன்றது ஒரு எண்ணக்கருவை மையமாக வைத்து டெங்கு நோயை பரப்புகின்ற நுளம்பை கட்டுப்படுத்துவதற்கான ஒரு மார்க்கமாகவே இந்த விசேட கூத்து டெங்கை ஒழிப்போம் எனும் தலைப்பில் தயாரிக்கப்பட்டது.



சாரணர் பயிற்சிக்கு சென்ற மாணவன் ஆற்றில் மூழ்கி மரணம் - வாழைச்சேனையில் சம்பவம்!
[Friday, 2013-05-24 18:16:27]

மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள மாந்தறை ஆற்றில் மூழ்கி மாணவர் ஒருவர் பலியாகியுள்ளார். இந்தச் சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் இடம்பெற்றதாக வாழைச்சேனைப் பொலிஸார் தெரிவித்தனர். மரணமானவர் பிறைந்துரைச்சேனை ஷாதுலியா வித்தியாலயத்தில் தரம் ஒன்பதில் கல்விகற்கும் பதுர்தீன் முஹம்மது பாயிஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.



ஒற்றுமையின் மூலமே பெற்றுக்கொண்ட சமாதானத்தை பாதுகாக்க முடியும் - ஹத்துருசிங்க!
[Friday, 2013-05-24 16:54:42]

2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் பெற்றுக்கொண்ட சாமாதானத்தை ஒற்றுமையின் மூலமே பாதுகாக்க முடியும் என்று யாழ். பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்தார். இன்று வெள்ளிக்கிழமை வெசாக் தினத்தையொட்டி பாதுகாப்பு படைகளின் ஏற்பாட்டில் நடைபெற்ற பசுமாடுகள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இதனை அவர் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்...


INNSYS-20120930
RoyaShades-l2011(04-12-11)
TDE_Computers2011
Mahesan supramaniyam 031109
Ramans2011
Suresh-remax-2013-01-01
AJRwindows22.05.13
TamilsGuid-191012-2013
Canada Kanthasamy Kovil
NIRO-DANCE-100213
      www.seithy.com      Copyright © 2010 - Contact Us at : infoseithy@gmail.com